பாடல்களை கொலை செய்யும் இசைகுழுக்கள்.சினிமா
பல திருமணங்களில் வரவேற்ப்பு நிகழ்ச்சிக்காக விடியோ பதிவு செய்கிறோம். சமீபத்தில் ஒரு திருமணத்திற்க்கு வீடியோ பதிவு செய்தோம். அந்த திருமணத்தில் ஒரு குழு இசை நிகழ்ச்சி நடத்தியது. நானாக நானில்லை தாயே, திங்கள் உறங்கிய போதும், பச்சைக்கிளி முத்துச்சரம், பாவடை தாவணியில், சங்கீதம் மேகம், பூமழை தூவி, கும்கியில் ஒரு பாடல் என சுமார் 25 பாடல்கள் பாடினார்கள். ஒரு பாடலும் சுமாராக பாடப்படவில்லை. எந்த இசை கருவியும், அந்த இசை கருவியை ஒட்டியை இசையை வெளிப்படுத்தும் ஆனால் அவர்கள் வைத்திருந்த இசை கருவிகள் புதிது புதிதாக இசையை வெளிப்படுத்தின.
இளமை என்னும் பூங்காற்று என்னும் எஸ்.பி.பியின் பாடல் பல நேரங்களில் நானும் என் நண்பர் புகைப்படக்காரர் ஜவஹரும் அடிக்கடி முனுமுனுப்போம். சில நிமிடங்களில் எங்கேயே அந்த பாடல் உண்மையாக ஒலித்துக்கொண்டு இருக்கும். அப்படி பல பாடல்கள் நம்மோடும், காற்றோடும் கலந்தவை. அந்தப்பாடல் திரையில் யாரும் பாடாமல் காட்சி அமைப்பாகவே படமாக்கப்பட்டு இருக்கும். அந்த பாடலில் எஸ்.பி.பியின் உணர்ச்சியும், காதலும், மெல்லிய காமமும் நம்மை கிறுகிறுக்கவைக்கும். தேனோடு கலந்த பால் என்பது போல் கூடவே ஒரு பெண்ணின் கோரஸ். அந்தப்பாடலை அந்த இசைக்குழுவை சார்ந்தவர் பாடும்போது அய்யோ என அலற தோன்றியது.
25 ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜா, எஸ்.பி.பி குழு தமிழகத்தை மட்டுமல்ல இசை துறையையே ஓட்டுமொத்தமாக கட்டிப்போட்ட காலம். உதயகீதம் என்னும் படத்தில் சங்கீதமேகம் என்னும் பாடல் கேட்போரையும், பார்ப்போரையும் ஒரு மேடை பாடகனாகவே உணரச்செய்யும். நம்மை அறியாமல் நம் கையில் மைக் இருப்பது போன்று கற்பனையில் பாடவைக்கும். அந்த பாடலை இந்த பாடகர் கொத்து பரோட்டாவாக்கினார்.
சோகம், காதல், தெய்வீகம், தத்துவம், அன்பு, விரோதம், கோபம் அனைத்தையும் வெளிக்கொறுனுபவை இசை. பாடல்களின் வார்த்தைகளுடனே அத்தனை இசை கருவிகளும் சேர்ந்து வரும், பதில் சொல்லும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். திரைப்பட பாடல்கள் உள்வாங்குபவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் இருக்கும் உணர்ச்சி கூட அந்த பாடலை மேடைகளில் பாடுபவர்களிடம் இல்லை. அதற்கு காரணம், எந்த முதிர்ச்சியும் அல்லது குறைந்த பட்ச பயிற்சியும் இல்லாமல் இசைக்குழுவை சார்ந்தவர்கள் மேடையேறுவதால் வரும் வினை.
இந்த நிகழ்ச்சியில் ஒரு கருவியை வாசித்தவர் பெரும்பாலும் செல்போனில் பேசிக்கொண்டே இருந்தார். மீதி நேரம் வாசிப்பது போல் ஃபிலிம் காட்டுவதையே குறிக்கோளாக கொண்டிருந்தார். நாசமாய் போனது இசை நிகழ்ச்சி. சிறிது நேரத்திற்க்கு பிறகு திருமண வரவேற்பு பிஸியாகிவிட்டதால் பாடல்கள் கேட்கவில்லை.
ஒரு இடைவேளைக்கு பிறகு மீண்டும் பாடல்களை கேட்கும் நிலை வந்தது. முதல் மரியாதை படத்தில் வெட்டிவேரூ வாசம் பாடல் மலேசியாவாசுதேவன், எஸ்.ஜானகி குரலில் ஒவ்வொரு மில்லி நொடியிலும் உயிர் கசியும். உணர்ச்சி, சுகம், பாசம், சோகம் காதில் லட்சகணக்கான நரம்புகளையும் மீட்டும் ஒரு சோகம். அந்த பாடலின் பின்னணி இசை மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைக்கும். தனிமையான ஒரு அறையிலோ அல்லது ஹெட்போனை காதில் மாட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு இந்த பாடலை கேளுங்கள். பாடலின் முடிவில் உங்கள் கண்களில் நிச்சயம் நீர் கசிந்தியிருக்கும். அந்த பாடலை மேடையில் பாடுவதை கேட்டபோது, வெறுப்பின் உச்சத்துக்கு சென்றேன்.
ஏதோ இந்த இசை குழுவில் மட்டும் தான் இப்படி பாடுகிறார்கள், இசையமைக்கிறார்கள் என நினைத்தால் தவறு. நான் இதுவரை பார்த்ததில் நூற்றுக்கு தொன்னூறு சதவிதம் இசைக்குழுக்களிலும் இதே நிலைதான். பயிற்சியும், தொழில் மேல் அக்கறையும் உள்ளவர்கள் மட்டுமே சிறப்பாக பாடுகிறார்கள், இசையமைக்கிறார்கள். பல இசைக்குழுக்களை ‘ஐபேட்’ என்ற சாதனம் வாழவைக்கிறது.
சில திருமணங்களில் பார்வையற்றவர்களின் இசை நிகழ்ச்சிகளை படம்பிடித்து இருக்கிறேன். அவர்களிடம் இருந்து வெளிப்படும் பாடலின் தரம் சத்தியமாக கண் தெரிந்த பாடகர்களிடம்மில்லை. இந்த இசை குழுக்கள் கண், காது இருந்தும் குருடர்கள், செவிடர்களே. பல இசையமைப்பாளர்களும், இயக்குநர்களும், பாடலாசிரியர்களும், பின்னணி பாடகர்களும் தூக்கத்தை தொலைத்து, வேர்வையை சிந்தி நமக்கு அளித்த பொங்கிஷங்கள் அவை. காலத்தால் அழியாத பக்தி பாடல்களும், திரைப்பாடல்களுக்கும் பங்கம் வராமல் காப்பது இந்த இசைக்குழுக்களின் கடமை. ஆனால் அதை பலப்பல இசைக்குழுக்கள் செய்வதில்லை.
எந்த தொழிலுக்கும் கலைக்கும் குறைந்த பட்ச பயிற்சி தேவை. என்னைப்பொருத்தவரை இந்த மாதிரி வெற்று சத்தங்கள், ஆரவாரங்கள் கூச்சல்களை எந்த நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யாமல் இருப்பது நல்லது. இந்த வெற்று கூச்சல்காரர்களால் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் மண்டபத்தில் அமருவதில்லை. உடம்பு சரியில்லாதவர்கள், குழந்தைகள், நேரத்துக்கு தூங்க வேண்டியவர்கள் பெருத்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
நல்ல இசை குழுக்கள் மூலம் இரண்டு மணி நேரத்தை திருமணத்துக்கு வருபவர்களுக்கு எல்லா கவலைகளையும் மறந்து சந்தோஷமாக இருக்க உதவுங்கள். இல்லையேல் விட்டுவிடுங்கள். பந்தாவுக்காகவும், வெத்து கவுரவத்துக்காகவும் இது போன்ற கூச்சல்காரர்களிடம் பணத்தை கொண்டும போய் அழிப்பதை விட ஸ்பீக்கர்களில் பாடலை ஓடவிடுங்கள் போதும். மண்டபங்களில் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் பேசிக்கொள்ளவாவது நேரமும் கிடைக்கும்.
மென்மையான பாடல்கள் உங்கள் மனச்சுமையை இறக்கி வைக்கும். பாடல்களை கேட்பதற்காகவே அதிகம் இரவு நேரங்களில் பயணம் செய்கிறேன். பேருந்தில் பயணிகளுக்கு தொந்தரவு இல்லாமல் இருக்க பேருந்தில் உள்ள ஸ்பீக்கர்கள் அனைத்துவிட்டு ஓட்டுநர் அவருக்காக சின்ன ஸ்பீக்கரில் பாடல் வைத்துக்கொள்வார். பயணம் முடியும் வரை எந்த சோர்வும் இல்லாமல் அவருடன் சேர்ந்து நானும் பாடல்களோடு பயணிக்கிறேன். சில நேரங்களில் சில மணித்துளிகள் அமைதியாக ஒரு உறக்கம் கிடைக்கிறது. இந்த இசைக்குழுக்களின் பாடல்களையும், செய்கைகளையும் பார்த்தப்பின் என்னால் பல நாட்கள் தூங்க முடிவதில்லை.
No comments:
Post a Comment