என்னண்ணே பெரிய்ய கோயில்ல சீரியல் பல்பு எரியுது........
நானும் நண்பர்களும் இன்று மாலை தேரடிவீதியில் உள்ள ஒரு தேனீர் கடைக்கு தேனீர் அருந்த சென்றோம். அப்போது உடன் வந்த நண்பன் ஒருவன் என்னண்ணா, பெரியகோயில்ல சீரியல் லைட் எரியுது என்னண்ணா விசேசம் என கேட்டான். அதை கேட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. அருணகிரிநாதர் விழாடா என பதில் சொன்னதும் அமைதியானான். என் மனமோ 30 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றது.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்க்கு அடுத்தபடியாக மக்கள் பெருமளவில் கூடும் பெரும் விழாக்களில் ஒன்று அருணகிரிநாதர் விழா.
மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழா. விழா நடைபெறும் மூன்று நாட்களும் சங்கபாடல்கள், திருப்புகழ், திருவாசகம், இதிகாசபாடல்கள், பக்திபாடல்கள் பாடுவார்கள். அத்தனை பாடல்களும் மனப்பாடம் செய்து பாடப்படுவதில்லை. உள்ளத்தில் இருந்து உணர்வு பூர்வமாக பாடுவார்கள். நாட்டியாஞ்சலி, கதாகலோட்சபம், மாடவீதியை வலம் வரும் பஜனை குழுக்கள், கோலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியடி என விழா களைக்கட்டும். அதிலும் குறிப்பிடவேண்டியது பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள் ஒன்று.
தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து கல்லூரி பேராசிரியர்கள், இலக்கியவாதிகள், தமிழ்பற்றாளர்கள், பேச்சாளர்கள் கலந்துக்கொண்டு தங்களுக்கான தலைப்புகளில் குறிப்புகளே இல்லாமல் அற்புதமாக பேசுவார்கள். கொடுக்கப்பட்ட தலைப்புகளில் சங்கபாடல்கள், திருப்புகழ்,
திருவாசகம், இதிகாசங்களில் இருந்து மேற்க்கோள் காட்டி பேசுவார்கள். அவர்களிடம் குறிப்புகள் இருக்காது, அந்தளவுக்கு இலக்கியம், இதிகாச பாடல்கள், இலக்கணம் பற்றிய விசய ஞானம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
படித்த இலக்கியவாதிகள் மேடைகளில் சங்க இலக்கியங்களில் இருந்து மேற்க்கோள் காட்டி பேசினால், படிக்காத, பாமர மக்கள் நிரம்பிய பஜனை குழுக்கள் படித்த இலக்கியவாதிகளுக்கு போட்டியாக சங்கஇலக்கிய பாடல்கள், திருவாசக பாடல்கள், புராண கதைகள் பற்றி பாடல்களாக தாங்களே இசையமைத்து பாடுவார்கள்.
இந்த மூன்று நாள்விழாவினை காண கிராமங்களில் இருந்து மக்கள் தங்கள் பிள்ளைகளோடு வருவார்கள். விடிய விடிய நடக்கும் விழாவினைகாணும் மக்கள் வீடுகளுக்கு திரும்ப வழியில்லாமல் உறவினர்கள் வீடுகளில் தங்குவார்கள்.
நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களால் செல்ல முடியவில்லை என்றால் தங்களது பிள்ளைகளை அனுப்பிவைப்பார்கள். அவர்கள் கேட்டுவிட்டு வந்து விவரிக்கும்போது அத்தனை ஆர்வத்தோடு கேட்பார்கள். அதிலும் பட்டிமன்றங்களின் போது பாதியில் சென்றவர்கள் தீர்ப்பு என்னவென அறிய துடிக்கும் ஆவலை விவரிக்க முடியாது. வெளியூர் மக்கள் விழாவுக்கு வர முடியாதவர்கள் உறவினர்களிடம் கேட்டு அறியும் போதும், அதனை விவரிக்கும் போது இருவரிடம்
அத்தனை பரவசம் இருக்கும்.
விழா நடைபெறும் நாட்களில் மக்கள் கூட்டம் மாடவீதியை நிரப்;பிவிடும். பஜனை குழுக்கள் மாடவீதியை வலம் வரும்போது
மக்கள் அவர்களின் தாகம் போக்க நீர், பால், பழரசங்களை தந்து உபசரிப்பார்கள். அந்தளவுக்கு மக்களிடம் ஈடுபாடுயிருந்தது.
வெளியூரிலிருந்து வரும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்ய மடங்கள், சத்திரங்கள் போட்டிபோட்டன.
இந்த மாதிரியான விழாக்களில் மக்கள் கூடும் போது, சான்றோர்கள் கூறும் கருத்துக்கள் மக்களை வழி நடத்தின. இதற்கான முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்து இருந்தார்கள். மக்களிடம் கருத்துக்களை கொண்டு சேர்க்க அன்று வாய்கள் இருந்தன, கேட்க காதுகள் இருந்தன, விவாதிக்க மக்களிடம் நேரமும், பொறுமையும் இருந்தன. பெரியவர்களை மதிக்கும் இளைஞர்கள் இருந்தார்கள். தற்போது பேசவும் ஆள்யில்லை, கேட்கவும் ஆள்யில்லை, வழிகாட்டும் பெரியவர்களின் சொல்லை கேட்க, மதிக்கும் பண்புமில்லை.
இன்றைய நவயுக, அவசர யுகத்தில் மாநகரங்கள், நகரங்களில் தங்களது தெருக்களில் நடக்கும் விழாக்களில் கூட கலந்துக்கொள்ள நேரங்கள் இல்லை என்பதை போலவும், தொலைக்காட்சி ஒன்றே வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியது. கிராமங்களில் பெரியவர்கள் கற்று தரும் கலைகளை கற்க வேண்டிய இளைஞர்கள் செல்ஃபோன்களில் மூழ்கியுள்ளார்கள். ஆடிமாதங்களில் தெருக்களில் நடக்கும் ஆடிமாத விழாக்களில் சினிமா பாட்டு கச்சேரிகள், நடனங்களுக்கு தரப்படும் முக்கியத்துவம் கூட அருணகிரிநாதர் விழாவுக்குயில்லை என்பது வேதனைக்குரியது.
போலியான நாகரீக காட்டாற்று வெள்ளத்தில் பல்வேறு அரிய மரங்களும், சந்தனகாடுகளும் அடித்து செல்லப்பட்டுவிட்டன. கடந்த 20 ஆண்டுகளில் நாம் தொலைந்ததும் அதிகம், தொலைத்ததும் அதிகம்.
நன்னெறி, பக்தி மார்க்கம், வாழ்க்கை தத்துவங்கள் அறிந்துக்கொள்ள வேண்டியதும், ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டங்களுக்கு பின்வரும் தலைமுறையை வழிநடத்தவும், நினைவூட்டவும், அதனை அறிந்துக்கொள்ளவும் வேண்டும். அப்படி செய்யாத சமூகம் நிச்சயம் தடம்மாறிவிடும்.

No comments:
Post a Comment