கடந்த 40 ஆண்டுகால திரையுலக பாடகர்களில் பெரியவர் டி.எம்.எஸ். வானொலி கோலோச்சிய காலத்தில் சுமார் 30 ஆண்டுகாலம் எந்த வானொலி அலைவரிசையில் வைத்து பாடல்கள் கேட்டாலும் பாடல் கண்ணதாசன், இசை எம்.எஸ்.வீ, பாடியவர் டி.எம்.எஸ் என இந்த மும்மூர்த்திகளின் பெயரை பலமுறை வானொலிகளில் கேட்கலாம்.
டி.எம்.எஸ் 52 இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்தவர் என்பதே பெரும் சாதனை.
15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பல மொழிகளில் பாடியவர். எந்த நடிகருக்கு பாடுகிறாறோ அந்த நடிகரே அவரது குரலில், நேரடியாக பாடுவது போன்ற பிரமிப்பு இருக்கும். பக்தி பாடல்கள் குறிப்பாக முருகர் பாடல்கள், கண்ணதாசனின் கிருஷ்ணகான பாடல்கள் கேட்டிராத செவிகள் இருக்க முடியாது. பாடல்களில் உள்ள சூட்சுமங்கள் அவர் பாடிய முருகர் பாடல்களில் மூன்று வரியில் விடை கிடைத்தது.
அசைச்சொல்லின் தொடராலே அமைந்தது ராகம்.
பாடல் அளவை முறைப்படுத்த அமைந்ததே தாளம்.
இசையின் பொருள் விளங்க பாடுதல் பாவம்
இசையால் வசமாக இதயம்மேது
இறைவனே இசை வடிவன்னும்போது..
தமிழில் இசையால் வசமாக இதயமேது.....
என அவர் பாடியது கேட்க கேட்க இசையின் உன்னதம் விளங்கும்.
நீண்ட இடைவெளிக்கு பின் சினிமாவின் இரண்டாம் தலைமுறை தொடக்கத்தில், இரயில் பயணங்கள் படத்தில்,
நூலும்மில்லை, வாலும்மில்லை என்ற பாடலும்,
அமைதிக்கு பெயர் தான் சாந்தி
என்ற பாடல்களை அப்போது முனுமுனுக்காத இளைஞர்கள் இல்லை எனலாம். ஒரு தலைராகம் படத்தில், என் கதை முடியும்நேரமிது என்ற பாடல்க்கு பின் குரல்வளம் ஒத்துபோகாத நடிகர்கள், காலமாற்றம் போன்றவற்றால் சினிமாவில் நீண்ட இளைவெளி டி.எம்.எஸ்க்கு ஏற்பட்டது.
மொழி தெரியாத பாடகர்கள் தமிழுக்கு வந்து பாடும்போது வரியின் உச்சரிப்பு மாறுவதால் அதன் பொருள் மாற்றம் ஏற்படுவதை கேட்டு பலமுறை தன் மனவேதனையை வெளிப்படுத்தினார் டி.எம்.எஸ். ஒரு பாடலை பாடி பிரபலமாகி உலகமெங்கும் கலைநிகழ்ச்சி சென்று வந்தால் சாதனை பேசும் இன்றைய பாடகர்களுக்கு மத்தியில் டி.எம்.எஸ் பொக்கிஷம்.
யார் தச்ச சட்ட எங்க தாத்தா தச்ச சட்ட என்ற வரியை தொடர்ந்து இருபது முறை வேகமாக சொன்னால் நாக்கு குழறும், உச்சரிப்பு வராது. ஆனால், டி.எம்.எஸ் அருணகிரிநாதர் படத்துக்காக பாடிய முத்தை திரு என்ற பாடலை ஒரு தடைவ கேட்டுப்பாடுங்கள் அந்த பாடலை பின் தொடர்ந்து பாட முடியாது, புரிந்துக்கொண்டு பின் தொடர்ந்து பாடவும் முடியாது.
எங்த ரெக்கார்டிங் தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத காலகட்டத்தில் பாடப்பட்ட பாடல் அது. அன்றைய காலகட்டத்தில் இசை கலைஞர்களும், பாடகர்களும், பாடலாசிரியர்களும் ஓரே அறையில் இருந்து பாடினர். ஓவ்வொருவரிடம் கற்றுக்கொள்ள ஆயிரம் விஷயங்கள் இருந்தன. இன்றைய இசை கலைஞன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியாத நிலையில் இசைத்துறை உள்ளது.
சமூக மாற்றங்களின் கட்டாயத்தில் இப்பொழுது கலைநிகழ்ச்சிகளில் இசையமைப்பாளர்கள் தாங்கள் இசையமைத்தது, பாடகர்கள் தாங்கள் பாடிய பாடல்களை மட்டுமே பாடி ஸ்டார்நைட் நடப்பதாகிவிட்டது. டி.எம்.எஸ் போன்ற மாபெரும் கலைஞர்களின் கஷ்டத்தையும், உழைப்பையும் சொல்வதற்க்கு யாருமில்லை, அந்த துறையிலும் யாருமமில்லை என்பது இன்னும் வேதனையானது. இன்றைய பாடல்களில் சத்தத்துக்கு இடமமிருக்கிறது, உணர்வுகளுக்கும், உணர்ச்சிக்கும் இடம்மில்லை.
கண்ணதாசன் தீர்க்கதரிசி. டி.எம்.எஸ்க்கு எந்த நிலையிலும் மரணம்மில்லை என்பதை பாடலாக எழுதி, டி.எம்.எஸ் வாயாலயே பாடவைத்தார்.
நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. உண்மைதான், காலங்கள் கடந்தாலும் அவர் இசையின் வழியாக நம்மிடம் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார், வாழ்வார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
பலர் ஒரு துறையில் பிறக்கிறார்கள். சிலர் மட்டுமே வாழ்கிறார்கள் அதில் நம் டி.எம்.எஸ் வாழ்ந்தவர். வாழ்கிறவர், வாழ்ந்துக்கொண்டே இருப்பார்.

No comments:
Post a Comment